Pages

புதன், 17 ஜனவரி, 2018

அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் – 2018




அகில இலங்கைத் தமிழ் மொழித்தினம் – 2018

 பாவோதல்,   போட்டிக்கான   பாடல்களும் அவற்றுக்கான பொருள்களும்.

இவ் வருடத்திற்கான இகில இலங்கைத் தமிழ் மொழித் தினத்திற்குதிய போட்டிகள் யாவும்,  2013 / 33 ஆம் இலக்க சுற்றுநிருபத்திற்கு ஏற்ப நடத்த ஏற்பாடுகள் அனைத்தும்  கல்வி அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இச் சுற்று நிருபத்திற்கு ஏற்ப  போட்டிகள் யாவும்  பின்வரும் அடிப்படையில்

அ) பாடசாலை மட்டப் போட்டிகள் 2018.02.28ந் திகதிக்கு முன்பும்

ஆ) வலய மட்டப் போட்டிகள் 2018.04.30 ஆம் திகதிக்க முன்பும்

இ) மாகாணப் போட்டிகள் யாவும் 2018.05.30 ஆம் திகதிக்கு முன்பும்  நடத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன்,

2018.05.31 ஆம் திகதிக்கு முன்பு தேசிய மட்டப் போட்டிகளுக்காக விண்ணப்பங்கள்  ஆனுப்பி வைக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

2018 யூலை மாதம் 14,15 மற்றும் 21, 22 ஆகிய தினங்களில் அகில இலங்கைத் தமிழ் மொழித்தினப் போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 பாவோதல் போட்டிகளில் பங்கு பற்றும் மாணவர்களுக்கான  விடயப் பரப்புகள் இச் சுற்றுநிருபத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் தேடலை இலகு படுத்துவதற்காக இந்தப் பதிவில் ஒவ்வொரு பிரிவுக்குமான பாடல்களும் அவற்றின் பொருள்களும்  இணைக்கப்பட்டுள்ளது.   

 கீழே தரப்பட்டுள்ள பாடல்களுக்கு பலர்  பொருளைப்  பல விதங்களில் எழுதியுள்ளனர். அதில் ஒரு வகையே இப் பதிவில் இடம் பெற்றுள்ளது.  பொருத்தமாயின் பயன்படுத்தி மாணவர்களுக்குப் பயிற்சியளித்து வெற்றி பெற வாழ்த்துக்கள்.  


பிரிவு  - 01    போட்டி – பாவோதல்      போ. இல – 23         வகுப்பு 4-5

பாரதியார் கவிதைகள்


( ஞாயிறு வணக்கம்  எனவும் சில பதிப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது)



காதல் கொண்டனை போலும்மண்மீதே, கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் இதில் ஐயமொன் றில்லை; சோதி கண்டு முகத்தில் இவட்கே
தோன்று கின்ற புதுநகை யென்னே!
ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்.


நாலடியார்               சினமின்மை                     பாடல் – 61


மதித்திறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப் பாரும் இறக்க - மிதித்தேறி
ஈயுந் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று.


பொருள் தம்மை மதித்து நடப்பாரும் நடக்கட்டும்; சிறிதும் மதிக்காது அவமதித்து நடப்பாரும் நடக்கட்டும்; அற்ப ஈயும் மிதித்து ஏறித் தலைமேல் உட்காருதலால், அந்நிலையை உணர்ந்து சிந்திக்கும் சான்றோர், தம்மை அவமதிப்போர் மீது சீறி விழும் சினம் இலராய் இருத்தல் நல்லது



பிரிவு  - 02          போட்டி – பாவோதல்     போ. இல – 24       வகுப்பு 6-7


பாரதியார் கவிதைகள்  - தேசிய கீதங்கள்  

   தமிழ்த்  தாய்  (  9-  12  வரை )

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.



ஏலாதி           பாடல் 15

கண் போல்வார்க் காயாமை; கற்றார், இனம் சேர்தல்;
பண் போல் கிளவியார்ப் பற்றாமை; பண் போலும்
சொல்லார்க்கு அரு மறை சோராமை; சிறிது எனினும்
இல்லார்க்கு இடர் தீர்த்தல், - நன்று.


பொருள் -   ஒருவன் றனக்குக் கண்போலு நட்டாரைக் காயாமையும், கற்றாரினஞ் சேர்தலும், அரிவையரை மிக அன்பு செய்யாமையும், அவர்க்கு மறை யுரையாமையும் வறியார்க்குச் சிறிதிடராயினும் தீர்த்தலுமாகிய வாறும் நல்ல குணம்,

கருத்து: கண்போல்வார்க் காயாமை முதலியன நல்லவாம்.





பிரிவு  - 03          போட்டி – பாவோதல்     போ. இல – 25       வகுப்பு 8-9



பாரதியார் பாடல்கள்  -                தேசிய கீதங்கள்  -          தமிழ் – 2,3

 யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
  
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
  
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
  
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
  
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

 பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
  
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
  
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
  
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
  
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.



ஏலாதி                             பாடல்  24


பிணி, பிறப்பு, மூப்பொடு, சாக்காடு, துன்பம்,
தணிவு இல் நிரப்பு, இவை தாழா - அணியின்,
அரங்கின்மேல் ஆடுநர்போல் ஆகாமல் நன்று ஆம்
நிரம்புமேல், வீட்டு நெறி.


பொருள்  பிணியும், ‘பிறப்பும், மூப்பும், சாக்காடும் இழவினான் வருந் துன்பமும், தேடுதலானே வருங் குறையாத விடும்பையுமென் றிவை யாறு மதிட்டியாது வருமாயிற் சொல் வேறுபாட்டினா னரங்கின்கண் வந்தாடும் கூத்தரைப்போலப் பிறந்திறந்துழலாதே வீட்டுநெறியே யொருவற்கு வந்து நிரம்புமாயினன்றாம்.

கருத்து: ஒவ்வொரு பிறப்பிலும் பிணி முதலான துன்பங்களுண்மையின், வீடுபேற்றிற்குரிய துறவொழுக்கத்தை மேற்கோடலே நன்மையாம்



நாலடியார்                  பொருட்பால் பாடல் – 215


கோட்டுப்பூப் போல மலர்ந்துபிற் கூம்பாது
வேட்டதே வேட்டதாம் நட்பாட்சி; - தோட்ட
கயப்பூப்போல் முன்மலர்ந்து பிற்கூம்பு வாரை
நயப்பாகும் நட்பாரும் இல்.


பொருள் கொம்பிலே பூக்கும் பூக்கள் முதலில் மலர்ந்து பின் உதிரும் வரை குவியாதிருத்தல் போல, முதல் நாள் உள்ளம் மகிழ்ந்து விரும்பியது போலவே முடிவு வரையில் மகிழ்ந்து விரும்பியிருப்பது நட்புடைமையாகும். அப்படியின்றி, தோண்டப்பட்ட குளத்திலே இருக்கும் பூவைப் போல முதலில் மலர்ச்சியைக் காட்டிப் பின்பு முகம் சுருங்கும் தன்மையுடையவரை விரும்புவாரும் இல்லை; நட்புச் செய்வாரும் இல்லை. (என்றும் முகமலர்ச்சியுடன் பழகுவரே நட்புக்கு அழகாம்).




. பிரிவு  - 04        போட்டி – பாவோதல்     போ. இல – 26       வகுப்பு 10 -11


பாரதிதாசன் கவிதைகள்     தமிழ்க் காதல்

 கமலம் அடுக்கிய செவ்விதழால் - மலர்க்
காட்டினில் வண்டின் இசைவளத்தால்
கமழ்தரு தென்றல் சிலிர் சிலிர்ப்பால் - கருங்
கண்மலரால் முல்லை வெண்ணகைப்பால் - மயில்
அமையும் அன் னங்களின் மென்னடையால் - மயில்
ஆட்டத்தினால் தளிர்  ஊட்டத்தினால்
சமையும் ஒருத்தி - அப் பூஞ்சோலை எனைத்
தன் வசம் ஆக்கிவிட் டாள் ஒருநாள்.

சோலை அணங்கொடு திண்ணையிலே - நான்
தோளினை ஊன்றி இருக்கையிலே
சேலை நிகர்த்த விழியுடையாள் - என்றன்
செந்தமிழ்ப் பத்தினி வந்துவிட்டாள்!
சோலையெ  லாம் ஒளி வானமெலாம் - நல்ல
தோகையர் கூட்டமெ லாம்அளிக்கும்
கோல இன் பத்தை யென் உள்ளத்திலே - வந்து
கொட்டிவிட்டாள் எனைத் தொட்டிழுத்தாள்!




கம்பராமாயணம்     போர் புரி படலம்   பாடல்  

இகழும் தன்மையன் ஆய இராவணன் 
புகழும் மேன்மையும் போயினவாம் என

நிகழும் கள் நெடு நீலம் உகுத்தலால்
அகழிதானும் அழுவது போன்றதே. 



நிகழும் கள் நெடுநீலம் உகுத்தலால் - பெருகுகின்ற  தேனை நீண்ட கருவிளை மலர்கள் சிந்துவதால்; இகழும் தன்மையன் ஆய இராவணன் - பழிக்கத்தக்க  பண்புடையவனாகிய  இராவணனுடைய; புகழும் - (வலிமை மட்டுமின்றி)  புகழும்இன்றோடு  போயினது
ஆம்  என-  இன்றோடு  போயிற்று  என்றுஅகழி  தானும்- இலங்கையின் அகழியும்; அழுவது போன்றது- அழுவதைப் போல இருந்தது.


பொருள்  பெருகுகின்ற  தேனை நீண்ட கருவிளை மலர்கள் சிந்துவதால்; பழிக்கத்தக்க  பண்புடையவனாகிய  இராவணனுடைய; புகழும்; இன்றோடு  போயிற்று  என்றுஇலங்கையின் அகழியும்; அழுவதைப் போல
இருந்தது.

( மேலதிக விளக்கத்திற்காகா - அகழியில்  உள்ள  நீலமலர்கள்  அகழியின் கண்கள் போன்றன. அவற்றில்  கள்  நீர் (தேன்) வடிவதுஇராவணன்  வாழ்வு  முடியப் போவதையறிந்து அவை கண்ணீர் விடுவது போன்றிருந்தது   என்றார். தன்மைத்  தற்குறிப்பேற்ற  அணி.  "தையலும்  கணவனும்   தனித்து உறுதுயரம், ஐயமின்றி  அறிந்தனபோலகருமிளையடுத்த  அகழியில், கருநெடுங்குவளையும் ஆம்பலும் கமலமும், கண்ணீர் கொண்டு  கால் உற  நடுங்க"  (சிலம்பு.  13.  181-88)  எனும்  அருமைக்கற்பனையை
அடியொற்றினார். )

 நளவெண்பா              பாடல் 46

அன்னம் தமயந்தியிடம் செல்லுதல்    பாடல் 46

வீமன் திருமடந்தை மென்முலையை உன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையாய் என்றுரைத்து நீங்கியதே அன்னம்
ஒடுங்கிடையாள் தன்பால் உயர்ந்து.

 (இ - ள்.) சேம நெடும் குடையாய்-(உலகமக்கட்கு) நன்மை செய்கின்ற விரிந்த (வெண்கொற்றக்) குடையையுடையவனே, வீமன் திருமடந்தை மெல் முலையை - வீமராசனின் செல்வ மகளான தமயந்தியின் இளமார்பினை, உன் உடைய வாம நெடும் புயத்தே வைகுவிப்பேன் - உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன், என்று அன்னம் உரைத்து - என்று அன்னப்பறவை கூறி, ஒடுங்கு இடையாள் தன்பால் - சிற்றிடையாளாகிய தமயந்தியினிடத்து, உயர்ந்து நீங்கியது - பறந்து போயிற்று.

பொருள் - உலகமக்கட்கு நன்மை செய்கின்ற விரிந்த வெண்கொற்றக் குடையையுடையவனே, வீமராசனின் செல்வ மகளான தமயந்தியின் இளமார்பினை,  உன்னுடைய அழகிய உயர்ந்த தோள்களைப் பொருந்தச் செய்விப்பேன், என்று அன்னப்பறவை கூறி, சிற்றிடையாளாகிய தமயந்தியினிடத்து, பறந்து போயிற்று.

(க - து.) தமயந்தியை உனக்கே மனைவியாக்குவேன் ’ என்று நளனிடம் கூறிவிட்டு, தமயந்திபால் அன்னம் பறந்து சென்றது.



(மேலதிக விளக்கத்திற்காகா  - வீமன் திருமடந்தை, வீமராசனின் அழகிய மகள் என்றலுமாம். ‘தமயந்தியைப் பிறர் எவருக்கும் மாலை சூட்டாமல் உனக்கே மாலைசூட்டி மணம்புணரச் செய்வேன்’ என்று அன்னம் நளனுக்கு உறுதிமொழி உரைத்தது. ‘சேம நெடுங்குடை’ உலகில்வாழும் உயிர்கட்கெல்லாம் அறநெறிதவறாமல் காக்கும் முறையுடையான் என்பதைக் குடைமேல் ஏற்றிக் கூறினார். ‘ஒடுங்கிடையாள்’ சிறிய இடையினை யுடையாள் - நல்லிலக்கணம்வாய்ந்த பெண்களுக்கு நெற்றியும் அடியும் இடையும் சிறுத்திருப்பதே இயற்கையாகலான், அவ்விலக்கணம் யாவும் முற்றும் நிரம்பியவள் என்பதை உணர்த்தியவாறாம். 




புறநானூறு    பாடல் 242

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.

 ஒல்லையூர் கிழான்மகன்பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீரத்தனார்
( குடவாயினல்லாதனார் ) பாடியது.

பொருள்  - இளைய வீரர் சூடார்; வளையணிந்த இளையமகளிர் பறியார்; நல்லயாழ்க்கோட்டின் மெல்லவளைத்துப் பாணன் பறித்துச்சூடிக்கொள்ளான்; பாடினி (பி - ம். பாணிச்சி) சூடாள்;தன்னுடைய ஆண்மைப்பாடு யாவர்க்கும் வெளிப்படவீரரை எதிர்நின்று கொன்று வென்ற வலிய வேலையுடையசாத்தன் இறந்துபட்டபின்பு முல்லையாய நீயும் பூக்கக்கடவையோ,அவனது ஒல்லையூர் நாட்டின்கண்?- எ - று.

(மேலதிக விளக்கத்திற்காகா - அவனையிழந்து கொடியேனாய்வாழ்கின்ற யானேயன்றி நீயும் கொடியையாய்ப் பூக்கின்றாயோவெனஎச்சவும்மையாய் நின்றது; என்றது, பூச்சூடி நுகர்வாரின்மையிற்பயனில்லையென்றதாம். 





உங்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளுங்கள்…..

மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்…….

நன்றி – தமிழ் இணையப் பல்கலைக்கழகம்   - இணையத்தளம்

                                தமிழச் சுரங்கம் -  இணையத்தளம்













2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

thank you

Gobi சொன்னது…

Good job. thank u sir